நாடாளுமன்ற தேர்தல்: 22ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நாடாளுமன்ற தேர்தல்: 22ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 18 March 2024 6:03 PM GMT (Updated: 18 March 2024 6:06 PM GMT)

திருச்சியில் வரும் 22ம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதேவேளை, தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை நாளை மறுதினம் முதல் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீது 28ம் தேதி பரீசிலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பபெற 30ம் தேதி கடைசி நாள் ஆகும்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க. கூட்டணி தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் இணைந்து எதிர்கொள்கிறது.

இதனிடையே தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகியுள்ள நிலையில் எஞ்சிய தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது

வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதை தொடர்ந்து உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். வேட்பு மனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்ய 17 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வார இறுதியில் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி அருகே சிறுகனூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story