நாடாளுமன்ற தேர்தல்: தே.மு.தி.க.வில் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல்


நாடாளுமன்ற தேர்தல்: தே.மு.தி.க.வில் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல்
x
தினத்தந்தி 17 March 2024 8:52 AM GMT (Updated: 17 March 2024 9:09 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் நாடாளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்பமனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், நாடாளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10.ஆயிரமும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 10மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story