ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ்


ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 9 Aug 2022 6:53 AM GMT (Updated: 9 Aug 2022 7:00 AM GMT)

ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டு உள்ளது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராமசபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது தான்.

தமிழ்நாட்டை இன்று பிடித்துள்ள 2 பெருங்கேடுகள் ஆன்லைன் சூதாட்டமும், மதுக்கடைகளும் தான். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது அரக்கன் ஆண்டுக்கு 2 லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்.

இந்த 2 சமூகக் கேடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தாலும், அவற்றின் தீமைகளை ஆட்சியாளர்களே ஒப்புகொண்டாலும் கூட, ஆன்லைன் சூதாட்டத்தையும், மதுவையும் தடை செய்வது தொடுவானத்தைப் போல நீண்டு கொண்டே தான் செல்கிறது.

மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்க சொல்லும் வகையில் வரும் 15-ந் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக கிராமசபைக் கூட்டங்களில் பா.ம.க.வினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story