"கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்"- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Feb 2024 5:16 PM GMT (Updated: 9 Feb 2024 6:07 PM GMT)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லாததால் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்கப்போவதாக தெரிவித்தனர். ஆனால் இதற்கு தடை விதித்த போக்குவரத்து துறை, நகருக்குள் ஆம்னி பேருந்துகள் நுழைய கூடாது என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்றும், மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறையை தொடரலாம் எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள ஐகோர்ட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது. ஆன்லைன், மொபைல் ஆப்-களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story