செங்கோட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற விரைவு ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்


செங்கோட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற விரைவு ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்
x

அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரெயிலின் எம் 5 பெட்டியில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக குளிர்சாதன வசதி வேலைசெய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள், இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அப்போது அதிகாரிகள், அடுத்த ரெயில் நிலையம் வந்தவுடன் சரி செய்யப்படும் என கூறியுள்ளனர். ஆனால் குளிர்சாதன வசதி செய்துகொடுக்காததால், ஆத்திரம் அடைந்த பயணிகள், அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அதிகாரிகள், திருவாரூர் ரெயில் நிலையத்தில் வைத்து தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு குளிர்சாதன வசதி செய்துகொடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பயணிகள் ரெயிலில் ஏறி சென்றனர். இதன் காரணமாக ரெயில் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது.


Next Story