மின்கழிவை முறையாக கையாளாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் - கலெக்டர் தகவல்


மின்கழிவை முறையாக கையாளாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் - கலெக்டர் தகவல்
x

மின்கழிவை முறையாக கையாளாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

மின்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளை சேகரித்து செயலாக்க முடியும்.

மேலும் மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின்கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவுகளை பிரித்தெடுப்போர். மின்கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.

மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016, விதி 24-ன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்கழிவுபொருட்களைச் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின்கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்.

முறைசாரா வர்த்தகம், அறிவியல் பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின்கழிவுகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016,விதி 21-ன்படி இந்த விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுபோர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986-ன் கீழ் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.

எனவே இந்த வகையான செயல்களில் ஈடுபடும் மின்கழிவு கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986-ன் பிரிவு 5-ன் படி அந்த நிறுவனத்தை மூடிடவும் அல்லது அந்த நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சட்டத்தின் பிரிவு 15-ன் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின்கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தை் தவிர்க்குமாறும், மேலும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு மின்கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story