உப்பிலியபுரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, மறியல்


உப்பிலியபுரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, மறியல்
x

உப்பிலியபுரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

உப்பிலியபுரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்டனர்.

குட்டையில் வேலை

உப்பிலியபுரம் அருகே உள்ள வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் ஊராட்சி எல்லை பகுதியில் இருந்த ரெட்டியார்குட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாளர்கள் சுமார் 200 பேர் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2 வாரமாக நடந்து வந்த இந்த பணியில், நேற்று முன்தினம் வேலை நடந்தபோது, சம்பந்தப்பட்ட குட்டை உரிமையாளர், அந்த குட்டை தனக்கு சொந்தமானது என்று கூறி தொடர்ந்து அங்கு வேலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்த தகவலின்பேரில் ஊராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணிகளை நிறுத்தினர். இதையடுத்து பணியாளர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

முற்றுகை-மறியல்

இதைத்தொடர்ந்து நேற்று காலை அந்த பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து முறையான பதில் வராததால், பொதுமக்கள் வைரிசெட்டிப்பாளையம்- கோட்டப்பாளையத்திற்கு இடையேயான பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நளினி, துணை தலைவர் மணிகண்டன், உப்பிலியபுரம் போலீஸ் சப்-இனஸ்பெக்டர் செபாஸ்டின் சந்தியாகு ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த வாரத்தில் இருந்து பணிகள் தொடரும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதற்கிடையே கவனக்குறைவாக நடைபெற்ற குட்டை பணிகளால் சுமார் ரூ.10 லட்சம் வீணடிக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Next Story