திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்


ஆடி 2-வது அமாவாசையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க திரளான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

திருச்சி

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினம் வந்தது. அதன்படி ஜூலை மாதம் 17-ந்தேதி முதல் அமாவாசையும், நேற்று 2-வது அமாவாசையும் வந்தது.இப்படியான சூழலில் 2-வது அமாவாசையை ஆடி அமாவாசையாக கடைப்பிடிக்க வேண்டும் என ஆன்மிக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பித்ரு தோஷம்

அந்த வகையில் 2-வது ஆடி அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக நீர் நிலைகளில் பக்தர்கள் திரண்டனர். இதில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மாநகர் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதனால் பித்ரு தோஷம், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்.

தர்ப்பணம் கொடுக்க 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் காவிரி ஆற்றங்கரை மணல் பரப்பில் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்களை ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். அதன் பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை வழங்கினர்.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். இதையடுத்து, அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


Next Story