குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்

சாலை விரிவாக்கப்பணிகள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விருத்தாச்சலம்-கும்பகோணம் வரை சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லாத்தூர் மெயின் ரோட்டு தெருவில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.இதையடுத்து அப்பகுதி பெண்கள் வெகுதொலைவுக்கு நடந்து சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் கடந்த 24-ந் தேதி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதில் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் கல்லாத்தூர் மெயின்ரோட்டில் நேற்று 2-வது முறையாக காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story