கொளுத்தும் வெயிலால் மக்கள் தவிப்பு


கொளுத்தும் வெயிலால் மக்கள் தவிப்பு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர்

பெரம்பலூர்

குடை பிடித்தபடி செல்கின்றனர்

கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்றும் வெயில் கடுமையாக கொளுத்தியது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்றனர்.

வாகன ஓட்டிகள் சிரமம்

வெயிலின் தாக்கத்தினால் சாலையில் கானல் நீர் தோன்றுகிறது. மேலும் வெயிலோடு சேர்ந்து அனல் காற்றும் வீசுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். வெயிலின் கொடுமையை சமாளிக்க முடியாமல் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கினர். இரு சக்கர வாகன ஓட்டிகள் கூலிங் கிளாஸ் அணிந்து செல்கின்றனர்.

இந்த வெயில் கொடுமையால் ஏற்படும் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, நுங்கு, தர்ப்பூசணி, இளநீர், முலாம் பழச்சாறு, நீர்மோர், கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகினர். மேலும் நீர் நிலைகளில் உற்சாக குளியல் போட்டு, வெயிலை சமாளித்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அந்த வெயிலை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்பதை பொதுமக்கள் தற்போதே புலம்பி வருகின்றனர்.


Next Story