ஆதார் அட்டை எடுக்க அதிகாலையில் இருந்து காத்திருக்கும் மக்கள்


ஆதார் அட்டை எடுக்க அதிகாலையில் இருந்து காத்திருக்கும் மக்கள்
x
தினத்தந்தி 6 Jun 2023 8:35 PM GMT (Updated: 7 Jun 2023 12:46 AM GMT)

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டை எடுப்பதற்காக அதிகாலையில் இருந்து மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டை எடுப்பதற்காக அதிகாலையில் இருந்து மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

ஆதார் மையம்

காரியாபட்டி தாலுகா பகுதியில் 120-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், செல்போன் எண் இணைப்பு போன்ற பல்வேறு திருத்தம் செய்வதற்கு காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு வருகின்றனர்.

ஆனால் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் அட்டை எடுப்பதற்கோ அல்லது திருத்தம் செய்வதற்கோ அதிகாலை 4 மணிக்கு வந்து வரிசையில் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாக அங்கு வருபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காத்திருக்கும் நிலை

இவர்களுக்கு காலை 10 மணிக்கு ஆதார் அலுவலகத்திற்கு வரும் நபர் டோக்கன் வழங்குகிறார். அதுவும் 30 டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு வரிசையில் நிற்கும் எண்ணற்ற பேர் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தற்போது பள்ளிக்கூடம் திறக்க உள்ள நிலையில் குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதற்கு அதிகமான நபர்கள் தினமும் வருகின்றனர். இவர்கள் பல மணி நேரம் காத்திருந்து பின்னர் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. ஆதார் எடுப்பதற்கு அதிகாலை 4 மணிக்கு வந்துகாத்து கிடக்கும் நிலையை மாற்றி மையத்தை நாடி வரும் அனைவருக்கும் ஆதார் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story