விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளிகள்


விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளிகள்
x

விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் திறமையை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம், குழுப் போட்டிகளான கபடி, வாலிபால், கை எறிபந்து ஆகிய போட்டிகள் ஆண், பெண் என தனித்தனியாக நடைபெற்றன. இதில், 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கை, கால் குறைபாடுள்ளவர்களுக்கு 50 மீட்டர் தடகளம், இறகுப்பந்து போட்டிகளும், செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், கபடி போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் எறிபந்து போட்டியும் நடந்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக்குழு நலவாழ்வு சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டார். இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ், ஆக்கி, வளைகோல் பந்து போட்டிகளும் நடந்தன. இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகளும், குழுப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் மே மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story