கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது


கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
x

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான மக்கள் வேலை வாய்ப்பு, கடன் உதவி, பசுமை வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 312 மனுக்களை அளித்தனர்.

அந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதை தொடர்ந்து கலெக்டர் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பாக 24 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக 15 பயனாளிகளுக்கு குழித்தட்டு நாற்றுகள் மற்றும் காய்கறி விதைகளை வழங்கினார். பாம்பு கடித்து உயிரிழந்த மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக 3 முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார். சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 331 மதிப்பீட்டில் மானிய தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வித்யா, (வேளாண்மை) எபினேசன், (தேர்தல்) முரளி, தோட்டக்கலைத் துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி, முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story