பெரம்பலூர் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு: பெட்ரோல் விலை உயர்வால் இ-பைக்காக மாற்றப்பட்ட மொபட்


பெரம்பலூர் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு: பெட்ரோல் விலை உயர்வால் இ-பைக்காக மாற்றப்பட்ட மொபட்
x

பெட்ரோல் விலை உயர்வால் பெரம்பலூர் இளைஞர் தனது மொபட்டை இ-பைக்காக மாற்றியுள்ளார். இது ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. தூரம் பயணிக்கலாம்.

பெரம்பலூர்

இ-பைக்காக மாற்றப்பட்ட மொபட்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் மாற்று வாகனங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள், மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத இ-பைக்குகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. இதன்விலை அதிகமாக இருப்பதால் அனைவராலும் இதை வாங்க முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த வகையில், மாற்று வாகனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்த ஐ.டி.ஐ. படித்த இளைஞர் ஒருவர் மொபட்டை இ-பைக்காக மாற்றி அசத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர், வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அதற்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் இ-பைக் வடிவமைக்க திட்டமிட்டார்.

50 கி.மீ. பயணிக்கலாம்

இதையடுத்து அவர், பழைய டி.வி.எஸ். மொபட்டில் மின் மோட்டார், பேட்டரி, கண்ட்ரோலர் உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களை ரூ.20 ஆயிரம் செலவு செய்து மொபட்டை இ-பைக்காக மாற்றியிருக்கிறார். இது குறித்து மணிகண்டன் கூறியதாவது:- இ-பைக்காக மாற்றப்பட்ட மொபட்டில் உள்ள பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 கி.மீ. வேகத்தில் 200 கிலோ எடை கொண்ட பொருட்களுடன் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.

ஒரு முறை சார்ஜ் போட ஒரு யூனிட் மின்சாரமே செலவாகும். இதில் 12 வோல்ட் கொண்ட 4 பேட்டரிகள் பொருத்தியுள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற கூடுதல் திறன்மிக்க மின்சாரத்தில் இயங்கும் மொபட்டை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story