பெரியபாளையம்: பேக்கரியில் தீ விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்


பெரியபாளையம்: பேக்கரியில் தீ விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
x

பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த தீ விபத்தால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தைச் சேர்ந்த மோகன்குமார்(வயது43). இவர் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே ஸ்வீட் ஸ்டால் மற்றும் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவர் வழக்கம் போல் கடையை மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

புயல் காரணமாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடிக்கடி இப்பகுதியில் மின்தடையும் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இன்று விடியற்காலை இக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

எனவே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அக்கடையின் கதவை திறக்க முயன்றனர். ஆனால், அரை மணி நேரமாக போராடியும் கதவை திறக்க இயலவில்லை. இதனால் ஜே.சி‌.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு இரும்பு கதவை உடைத்து பார்த்தபோது கடையின் உள்ளே தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். ஆனால், இந்தக் கடையில் ஸ்வீட், காரம், பேக்கரி பொருட்கள் ஆகிய அனைத்தும் இயந்திரத்தைக் கொண்டு செய்வதால் இவை அனைத்தும் தீயில் எரிந்ததால் இத்தீயை விரைவாக அணைக்க இயலவில்லையாம். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போக்குவரத்து நிறைந்த பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த தீ விபத்தால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. விடியற்காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story