ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதி


ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும்,   ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதி
x

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதிக்கப் பட்டுள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

வெள்ளப்பெருக்கு

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதையை மூழ்கடித்த படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 18-தேதி முதல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

அருவியில் குளிக்க அனுமதி

இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி நீக்கி உத்தரவிட்டார். அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். மேலும் மேட்டூர் அணை 117 அடியை எட்டி உள்ளதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரையில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.


Next Story