முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது


முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2023 8:24 AM GMT (Updated: 19 Aug 2023 9:58 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கி முத்து என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக இன்று அதிகாலை சென்னை தெற்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் கூறினார். உடனடியாக பதறிய போலீசார், தி,நகர் துணை ஆணையர் தலைமையில் தேனாம்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் சோதனை நடத்தினர்.

சுமார் 1 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இசக்கி முத்து என்பவர் பேசியது தெரிய வந்தது.

உடனே தேனாம்பேட்டை போலீசார் கன்னியாகுமரி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இசக்கி முத்து(48) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததை அடுத்து அவரது பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story