மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான மனு- தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு


மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான மனு- தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு
x

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை,

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில், அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறிய சென்னை ஐகோர்ட்டு, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Next Story