மதுரையில் இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


மதுரையில் இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x

மதுரையில் மது குடித்து ரகளை செய்தவர்களை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த 3 பேர், திடீரென இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை

மதுரையில் மது குடித்து ரகளை செய்தவர்களை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த 3 பேர், திடீரென இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மது குடித்து ரகளை

மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது 28). திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை விட்டு பிரிந்து, தந்தையுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிலர் மதுகுடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் திவ்யா உள்ளிட்ட சில பெண்களை கேலி-கிண்டல் செய்து வந்ததாகவும், அவர்களை திவ்யா கண்டித்ததாகவும் தெரிகிறது. அதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மதுகுடித்து விட்டு மதுபாட்டிலை அவரது வீட்டின் முன்பு உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் அவர்களை திவ்யா சத்தம் போட்டுள்ளார்.

பெட்ரோல் குண்டுவீச்சு

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திவ்யா வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது, அவரது வீட்டின் முன்புள்ள திரைச்சீலை தீப்பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த தீயை அணைத்தனர். மேலும் வீட்டின் சுவரில் விரிசலும் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா, மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் மதிச்சியம் இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

அவர்கள் விசாரணை நடத்தியபோது, அதே பகுதியை சேர்ந்த அலாவுதீன் மகன் முகமது அலிப்கான்(20), வேல்முருகன் மகன் ஸ்ரீதர்(20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இளம் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story