பெரியகுளம் அருகே பரிதாபம்:மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி:மீட்க சென்ற உறவினரும் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு


பெரியகுளம் அருகே பரிதாபம்:மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி:மீட்க சென்ற உறவினரும் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:45 PM GMT)

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி பலியாகினர். மீட்க சென்ற உறவினரும் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

மாட்டு கொட்டகை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பங்களாப்பட்டி, பெரியார் காலனியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 34). இவர், பெரியகுளம் நகராட்சி கழிவுநீர் உந்துதல் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹேமாவதி (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அரவிந்த், அதே பகுதியில் உள்ள நஞ்சாவரம் கண்மாய் அருகே மாட்டு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை இவர், மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக கொட்டகைக்கு சென்றார். ஆனால் இரவு வரை அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஹேமாவதி அரவிந்தை தேடி செல்ல முடிவு செய்தார். இரவு நேரம் என்பதால் தனியாக செல்ல அச்சமடைந்த அவர் அருகே வசிக்கும் அரவிந்தின் அக்காள் கணவர் செந்தில்குமார் (40) என்பவரையும் அழைத்து கொண்டு மாட்டு கொட்டகைக்கு சென்றார்.

தம்பதி சாவு

அங்கு இருவரும் அரவிந்தை தேடி அலைந்தனர். இரவு நேரம் என்பதால் செந்தில்குமார், ஹேமாவதியை அங்குள்ள வரப்பு பகுதியில் இருக்குமாறு கூறிவிட்டு அவர் தேடி சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வந்தபோது ஹேமாவதியை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர் செல்போன் மூலம் தனது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் உடனடியாக உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பலர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாட்டு கொட்டகை அருகே உள்ள பகுதியில் தேடினர். அப்போது மாட்டு கொட்டகை அருகே உள்ள சகதியில் அரவிந்த், அவரது மனைவி ஹேமாவதி ஆகியோர் இறந்து கிடந்தனர். இதை பாா்த்து கதறி அழுத செந்தில்குமார் அவர்களை தூக்க சென்றார்.

தூக்கி வீசப்பட்டார்

அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் பார்த்தபோது அங்கு சகதியில் அறுந்து கிடந்த மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான அரவிந்த், ஹேமாவதி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், மாடுகள் கொட்டகையை விட்டு வெளியேறாமல் இருக்க கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை

அந்த வேலியில் கொட்டகையில் போடப்பட்டிருந்த மின்வயர் அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத அரவிந்த் அந்த வயரை மிதித்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார்.

மேலும் கணவரை தேடி சென்றபோது அவர் இறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியில் ஹேமாவதியும் அரவிந்தை தூக்க சென்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தம்பதி பலியான சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story