வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி


வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
x

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருச்சி

வைகுண்ட ஏகாதசி விழா

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 2-ந்தேதி வரை 22 நாட்கள் நடைபெறுகிறது. டிசம்பர் 13-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது.

22-ந் தேதி மோகினி அலங்காரமும், 23-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 30-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ந் தேதி தீர்த்தவாரியும், 2-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

இதனை முன்னிட்டு ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிமுதல் 10.40 மணிக்குள் தனுர் லக்கினத்தில் நடைபெற்றது. இதையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தின. அதுசமயம் முகூர்த்த பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல் காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர்பட்டர், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story