பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: தேர்வு முடிவுகள் மே 6-ந்தேதி வெளியாகிறது


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: தேர்வு முடிவுகள் மே 6-ந்தேதி வெளியாகிறது
x

கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் 83 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர்.

இந்த தேர்வுக்கான விடைத்தாளை திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 பள்ளிக்கூடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. இப்பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

இப்பணி வருகிற 13-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின்னர், மாணவ-மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவிடும் பணி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளவாறு பிளஸ் 2 தேர்வு முடிவு அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி வெளியாக உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 6-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரையிலும், தற்போது நடைபெற்று வரும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 12-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story