ஆசை வார்த்தை கூறி பிளஸ் 2 மாணவரை கடத்தி குடும்பம் நடத்திய 22 வயது இளம்பெண்...!


ஆசை வார்த்தை கூறி பிளஸ் 2 மாணவரை கடத்தி குடும்பம் நடத்திய 22 வயது இளம்பெண்...!
x
தினத்தந்தி 16 April 2023 8:28 AM GMT (Updated: 16 April 2023 9:44 AM GMT)

வெள்ளகோவிலை சேர்ந்த பிளஸ்-2 மாணவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று குடும்பம் நடத்திய இளம்பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெள்ளகோவில்,

இது பற்றி ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவர் விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது வெள்ளகோவில் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வது வழக்கம்.அப்போது அப்பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாறியதால் அவர்கள் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறையையொட்டி ஊருக்கு வந்த மாணவர் கடந்த ஜனவரி 23-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்ல வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த மாணவரும், 22 வயது இளம்பெண்ணும் ஓசூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் இருவரையும் வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் மாணவரும், அந்த இளம்பெண்ணும் ஈரோடு, சேலம், வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய பகுதிகளில் பஸ்சிலேயே சுற்றி வந்துள்ளனர். அதன் பிறகு ஓசூரில் இருவரும் கணவன்-மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருவரும் தனித்தனியாக துணிக்கடைகளில் வேலை செய்து வந்துள்ளனர். மேலும் அந்த இளம்பெண் இதற்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து 2 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்ததாகவும், அந்த வாலிபர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் அவரை விட்டு பிரிந்து பெற்றோர்களுடன் தங்கி முத்தூரில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் வேலைக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. அதன் பின்னர் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதால் ஆசைவார்த்தை கூறி அவரை அழைத்துச்சென்று குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது இளம்பெண் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மாணவரை அவர்களது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story