கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை


கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2022 4:03 PM GMT (Updated: 4 Jun 2022 5:33 AM GMT)

கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை

திருப்பூர்

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே செல்போனில் 'ஸ்டேட்டஸ்' வைப்பதில் தோழிகளுடன் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவி தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

பிளஸ்-2 மாணவி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 50). கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய மகள் கீர்த்தனா (17). இவர் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு தற்போது டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் டைப்பிங் கற்று வந்தார்.

இவர் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார். 60 அடிஆழம் கொண்ட கிணற்றில் 50 அடிஉயரத்திற்கு தண்ணீர் உள்ளது. பின்னர் கிணற்றின் விளிம்பில் நின்ற கீர்த்தனாவின் செல்போனில் தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர் மனோஜ் என்பவரை தொடர்பு கொண்டு " நான் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என கூறியுள்ளார். அதற்கு அவர் அவ்வாறு செய்யாதே என சொல்லும் போதே செல்போைன ஆப் செய்யாமல் வீசிவிட்டு கிணற்றில் குதித்து விட்டார். செல்போன் ஆப் ஆகாததால் கீர்த்தனா கிணற்றில் விழுத்த சத்தம் மனோஜிக்கு கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மனோஜ் உடனே சோழமாதேவியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை தொடர்பு கொண்டு கீர்த்தனாவை காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.

உடல் மீட்பு

இதையடுத்து பிரபாகரன் அந்த கிணற்றுக்கு ஓடோடி சென்றார். அப்போது கிணற்றின் அருகில் கீர்த்தனாவின் செருப்பும், செல்போனும் கிடந்துள்ளது. உடனடியாக பிரபாகரன் உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த துறையினர் கிணற்றில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கீர்த்தனாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடலை உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கீர்த்தனாவின் தந்தை காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் செல்போனில் 'ஸ்டேட்டஸ்' வைப்பது தொடர்பாக தனது தோழிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சல் அடைந்த கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story