பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் தவணை தொகையினை பெற ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும்


பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் தவணை தொகையினை பெற ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும்
x

பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் தவணை தொகையினை பெற ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அரியலூர்

தமிழ்நாட்டில் 'பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி' திட்டமானது கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடிப்பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 14-வது தவணையாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த மாதம் முடிய உள்ள காலத்திற்கான தவணை தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்ட விவசாயிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் மூலமாகவோ, ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம். அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது செல்போனில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்களது அருகே உள்ள வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story