தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


தினத்தந்தி 28 Feb 2024 4:57 AM GMT (Updated: 28 Feb 2024 10:21 AM GMT)

தூத்துக்குடி சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

இன்று காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். பிரதமர் மோடி காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார். அதனை தொடர்ந்து நாட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.

இதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதேபோல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிதார். ஒட்டு மொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் எ.வ.வேலு, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முதலில் தேசிய கீதமும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.


Next Story