பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்


பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
x
தினத்தந்தி 27 Feb 2024 12:33 AM GMT (Updated: 27 Feb 2024 5:40 AM GMT)

திருப்பூரை அடுத்த பல்லடம் மாதப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 'என் மண் என் மக்கள் பாதயாத்திரை' நிறைவு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.

திருப்பூர்,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.

பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்ட மைதானத்துக்கு செல்கிறார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.

இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 2.35 மணிக்கு பல்லடம் வருகிறார். அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார். பின்னர் பிரதமர் மோடியும், அண்ணாமலையும் வாகனத்தில் ஏறி ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்கள்.

மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மதுரையில் தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் இரவு மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

அதன்பிறகு மறுநாள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடியில் நடக்கும் புதிய திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் நெல்லையில் காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் உள்ள மைதானம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானவர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story