பா.ம.க. பிரமுகர் வெட்டி கொலை


பா.ம.க. பிரமுகர் வெட்டி கொலை
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:46 PM GMT)

விக்கிரவாண்டி அருகே பா.ம.க. பிரமுகர் வெட்டி கொலை 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம்

விக்கிரவாண்டி

பா.ம.க. மாவட்ட துணை செயலாளர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் ஆதித்யன்(வயது 45). விழுப்புரம் மாவட்ட பா.ம.க. துணை செயலாளராக இருந்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பனையபுரத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாதானூரான் வாய்க்கால் அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு

இதுகுறித்து ஆதித்யனின் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆதித்யனுக்கும் அவரது உறவினர் ஒருவர் தரப்பினருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் மற்றும் பாலம் கட்டும் பணி சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் குவிப்பு

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளிகளை பற்றிய துப்பு துலங்கியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கொலைசெய்யப்பட்ட அதித்யனின் உடல் பிரேத பரிசோதனை நேற்று மதியம் 2 மணி அளவில் முடிந்ததை அடுத்து உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பா.ம.க. பிரமுகர் கொலை சம்பத்தை அடுத்து ஏற்பட்ட பதட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தடுக்க கப்பியாம்புலியூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story