பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு


பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
x

திருவண்ணாமலை அருகே பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய கவுன்சிலர்

திருவண்ணாமலை அருகில் உள்ள இனாம்காரியந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். பா.ம.க.வை சேர்ந்த இவர் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் கவுன்சிலராக உள்ளார். இவர் இன்று மாலை திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பைபாஸ் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து கொண்டு இருந்தார்.

அந்த டீக்கடையின் அருகில் உள்ள மெக்கானிக் ஷெட்டில் நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் அந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்த 16 வயது சிறுவனிடம் திடீரென தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் அந்த சிறுவனை அடிக்க முயன்றனர். இதனால் அச்சம் அடைந்த சிறுவன் அருகில் இருந்த டீக்கடைக்குள் ஓடியுள்ளார்.

அப்போது அந்த நபர்கள் 2 பேரும் திடீரென அரிவாளால் சிறுவனை வெட்டியுள்ளனர். மேலும் அப்போது அருகில் இருந்த முருகனையும் அவர்கள் வெட்டியுள்ளனர்.

இதில் அவர்கள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் மர்ம நபர்கள் அங்கு தயார் நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்த நபருடன் தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை

இதில் படுகாயம் அடைந்த 2 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கவுன்சிலர் மீது உள்ள முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது மெக்கானிக் ஷெட்டில் இருந்த சிறுவன் மீது தாகுதலின் போது அருகில் இருந்த கவுன்சிலருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story