போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது


போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
x

போதை மாத்திரை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சி உறையூர் காசிவிளங்கி பாலம் அருகே போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து சென்ற உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அங்கு போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை விற்றவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், உறையூர் காவல்காரன் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 20), பீமநகரை சேர்ந்த மனோஜ்குமார் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்கு

*கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் சரவணன்(43). இவர் திருவெறும்பூர் காட்டூரை சேர்ந்த கங்காதேவியை திருமணம் செய்தார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கிடையே விவாகரத்து தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி சிங்காரத்தோப்புக்கு சென்ற சரவணன், அங்கு கங்காதேவி வேலை செய்யும் கடை முன்பு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார். இது குறித்து கங்காதேவி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர்.

டிரைவர் திடீர் சாவு

*திருச்சி மலைக்கோட்டை கீழஆண்டார்வீதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(50). இவர் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் இவர் அந்த நிறுவனத்தின் கழிவறைக்கு சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கஞ்சா பறிமுதல்

*திருச்சி இ.பி.ரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காமராஜ்நகரை சேர்ந்த குருசாமியின் மகன் கதிரேசன் (வயது 19) என்பவர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பாலக்கரை மார்சிங்பேட்டையில் கஞ்சா விற்ற கூனிபஜாரை சேர்ந்த சுதாகர் (43) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story