குன்றத்தூரில் ரூ.1 கோடி குட்கா பொருட்கள் பறிமுதல்


குன்றத்தூரில் ரூ.1 கோடி குட்கா பொருட்கள் பறிமுதல்
x

குன்றத்தூரில் 7 வாகனங்களில் எடுத்து வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

காஞ்சிபுரம்

7 வாகனங்களில் குட்கா

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்து வந்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திருமுடிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா வாகனங்களில் மாற்றப்படுவதாக குன்றத்தூர் போலீஸ்காரர் காந்தி என்பவருக்கு வந்தத்தகவலின் பேரில் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் சென்ற போலீசார் திருமுடிவாக்கம் சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வாகனங்களை சோதனை செய்தபோது அங்கிருந்த நபர்கள் தப்பி ஓடினார்கள். அவர்களை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றும் முடியாததால் அங்கிருந்த 7 வாகனங்களை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.1 கோடி குட்கா பொருட்கள்

இதையடுத்து 7 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்கா என்பதும் வாகனங்களில் எடுத்து வந்தவர்கள் இங்கிருந்து கடைகளுக்கு விற்பனை செய்ய நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது.

5 தனிப்படைகள் அமைப்பு

மேலும், குட்காவுடன் வாகனங்களை விட்டுச்சென்ற நபர்கள் யார் என்பது குறித்து கண்டறிய 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருவதாகவும், பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்காவை மொத்தமாக எடுத்து வந்து இரவு நேரங்களில் திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story