தமிழ்நாட்டில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை - சசிகலா


தமிழ்நாட்டில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை - சசிகலா
x

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என சசிகலா தெரிவித்து உள்ளார். இது குறித்து அறிக்கையில் கூறிய அவர், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு அமைந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு என்றால் எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பின்றி ஒவ்வொரு நாளும் தங்களுடைய உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நிரூபிக்கின்ற வகையில் அண்மையில் திருச்சியில் உள்ள திமுகவை சேர்ந்த அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் சண்டை போட்டுகொண்டு இருப்பது இப்பொழுது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருச்சி மாநகரில் அமைச்சர் பொறுப்பில் உள்ளவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என்று போட்டிப்போட்டு கொண்டு தங்கள் கோஷ்டியினரை வைத்து பயங்கரமாக தாக்கி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்த திமுகவினர் தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த பெண் தலைமை காவலரையும் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பெண் காவலரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே, தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் இது போன்று யாரும் நடந்தது இல்லை. நடக்க விட்டதும் கிடையாது. இன்றைக்கு ஆளுங்கட்சியினரின் அராஜக செயல்களை கட்டுப்படுத்தமுடியாமல் காவல்துறை திணறிவருகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரோ தனது சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இது போன்று இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை?

திமுகவினர் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சுத்தமாக இருக்காது. இதெற்கெல்லாம் விடிவு காலம் விரைவில் வரப்போகிறது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தந்த அதே பொற்கால ஆட்சியை அமைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீராக்கி மக்களுக்கு பாதுகாப்பானவாழ்கையை ஏற்படுத்தி கொடுப்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். என்று அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story