11-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி


11-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி
x

டாக்டர்.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 11-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், சம்யுக்தா ஆதித்தன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி. பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர்.

தெலுங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னரும், தென் சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மனித நேய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.






Next Story