அண்ணா உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் நினைவு நாளை முன்னிட்டு அண்ணா உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க

.தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான ரா.சுதாகர் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க.

தூத்துக்குடி மாநகர ம.தி.மு.க. சார்பில் காமராஜ் காய்கனி மார்க்கெட் அருகில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story