மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களில் பொங்கல் விழா


மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களில் பொங்கல் விழா நடந்தது. கவுன்சிலர்கள் கும்மியடித்து கொண்டாடினர்.

வேலூர்

பொங்கல் விழா

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இதை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கும்மியடித்து கொண்டாட்டம்

இதேபோல, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பொங்கல் விழா நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார் முன்னிலை வகித்தார். மண்டலக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பெண் கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் பானையை சுற்றி கும்மியடித்து கொண்டாடினர்.

இதில் இஸ்லாமிய பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Next Story