பொங்கல் பரிசு தொகுப்பு போதுமானது அல்ல: கரும்புடன் ரூ.2,500 வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


பொங்கல் பரிசு தொகுப்பு போதுமானது அல்ல: கரும்புடன் ரூ.2,500 வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு ஏதிரான போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு அறிவித்திருக்கும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு போதுமானதல்ல. தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க அறிவித்திருந்தாலும் இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

தமிழகத்தில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு அறுவடை செய்திருக்கின்ற வேளையில் அவர்களிடம் கரும்பை கொள்முதல் செய்து, அதனை பரிசுத் தொகுப்பாக கொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு ஏதிரான போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக ரொக்கமாக அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாயும் போதுமானதல்ல. குறைந்த பட்சம் ரூ.2,500 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க முன்வர வேண்டும். எனவே, தமிழக அரசு, பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2,500 மற்றும் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க அறிவிப்பு வெளியிட்டு, செயல்படுத்த வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story