பொங்கல் பரிசு தொகுப்புக்கு நாளை மறுநாள் முதல் டோக்கன் வினியோகம்கலெக்டர் தகவல்


பொங்கல் பரிசு தொகுப்புக்கு நாளை மறுநாள் முதல் டோக்கன் வினியோகம்கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2022 6:45 PM GMT (Updated: 31 Dec 2022 6:45 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு நாளை மறுநாள் முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர்


இதுதொடர்பாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1.12.2022-ல் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் ரூ.1000 ரொக்கப் பணம் 9.1.2023 முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 1.12.2022 அன்றைய தேதியின் படி நடைமுறையில் உள்ள 7 லட்சத்து 73 ஆயிரத்து 601 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 426 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேர் பயன்பெறுவார்கள்.

மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் சிரமமின்றி பொங்கல் பரிசு பெறும் வகையில் தெரு மற்றும் பகுதி வாரியாக வழங்க அட்டவணையிட்டு, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 8.1.2023 வரை (விடுமுறை தினமான 6.1.2023 வெள்ளிக்கிழமை நீங்கலாக) டோக்கன் வழங்கப்படும்.

கட்டுப்பாட்டு அறை அமைப்பு

பொங்கல் பரிசு டோக்கன் வழங்குதல் தொடர்பாக புகார்கள் ஏதுமிருப்பின் அதனை தீர்வு செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை (கலெக்டர் அலுவலகம்) 04142-230223 மற்றும் (இணை பதிவாளர் அலுவலகம்) 04142-284001 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதற்காக மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரை 7338720401 என்ற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 9445000209 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் கூடுதல் தகவல்களை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்க பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்களும் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story