பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்


பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
x

பைத்தந்துரையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே பைத்தந்துரை கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா 12 ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களால் கோவிலில் கடந்த 23 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு திருவிழா நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி தேர்த்திருவிழா கடந்த 13-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து பொன்னியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தல், சாமி வீதிஉலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தேரோட்டம்

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கரைக்காரர்கள் செய்திருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story