அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 22 July 2022 3:24 PM GMT (Updated: 22 July 2022 3:25 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடிவெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடிவெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது

சிறப்பு பூஜை

மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை வந்தாலும் ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்பிகை அருள்தரும் வெள்ளியாக கருதப்படுகிறது. வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது.

குறிப்பாக முதல் வெள்ளிக்கிழமை என்பது அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஆராதனை நடத்தப்படும். இதன்படி நேற்று முதல் ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தீப ஆராதனை

கோவில்களில் விளக்கு பூஜை, ஆடிவெள்ளி ஊஞ்சல் உற்சவ பூஜை, குங்கும அர்ச்சனை போன்றவை நடத்தப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதுதவிர அம்மன்கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். விழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதுதவிர, அனைத்து வீடுகளிலும் பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டனர்.

இதனையொட்டி வீடுகளில் உள்ள அம்மன் படங்களை மலர்களால் அலங்கரித்து கோலமிட்டு சிறப்பு படையலிட்டு நெய்தீபம் ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர். ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள ருத்ரமாதேவி, உதிரகாளி, மல்லம் மாள்காளி, வெட்டுடையாள் காளி, பெரியமாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

விவசாய பணி

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பொதுவாக ஆடிவெள்ளி என்பது பருவமழையின் தொடக்க கொண்டாட்டமாக கருதப்படுகிறது. சூரியனின் தெற்கு நோக்கிய பயணத்தை குறிக்கும் தட்சிணாயனம் எனும் நிகழ்வாகும்.

இந்த மாதத்தில் தான் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழைபொழிந்து பூமி குளிர்ச்சி அடைவதோடு ஆடி 18 அன்று விவசாய பணிகளை தொடங்கும் வழக்கமாகும்.

அதன்படி நேற்று ஆடிவெள்ளி அன்று ராமநாதபுரத்தில் மிதமான தூறல் சாரல் மழையாக பெய்தது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story