பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மைல் கல்லுக்கு பூஜை நடத்திய சாலை பணியாளர்கள்


பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மைல் கல்லுக்கு பூஜை நடத்திய சாலை பணியாளர்கள்
x
தினத்தந்தி 21 Oct 2023 7:00 PM GMT (Updated: 21 Oct 2023 7:00 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை நாளை (திங்கட்கிழமை) கொண்டாப்பட உள்ளது. இந்த நாளில் பொதுமக்கள் தங்களது தொழில், வேலைக்கு பயன்படுத்தும் கருவிகள், எந்திரங்கள், வாகனங்களை தூய்மைப்படுத்தி மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் திலகம் வைத்து வழிபாடு செய்வார்கள்.

அதன்படி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சாலை பணியாளர்கள் வித்தியாசமான முறையில் ஆயுதபூஜையை கொண்டாடினர். அதாவது சாலை பணியாளர்கள் தங்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு படையல் போட்டு வழிபாடு நடத்தி உள்ளனர். இதற்காக பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைகோட்டையில் இருந்து கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு பூஜை செய்தனர். அத்துடன் வாழை தோரணம் கட்டி இலையில் படையல் போட்டு வழிபாடு செய்தனர். இதையடுத்து பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதேபோல் பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி, சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை பகுதிகளில் உள்ள மைல் கல்லுக்கும் படையல் போட்டு வழிபாடு செய்தனர்.

சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு பூஜை செய்தது அந்த வழியாக சென்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Next Story