பாப்கார்ன் ரூ.150 முதல் ரூ.400 டீ, காபி ரூ.70-க்கு விற்பனை; 'தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது' - பொதுமக்கள், மாணவிகள் கருத்து


பாப்கார்ன் ரூ.150 முதல் ரூ.400 டீ, காபி ரூ.70-க்கு விற்பனை; தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது - பொதுமக்கள், மாணவிகள் கருத்து
x

மக்காச் சோளப் பொரிக்கு 250 ரூபாய்! காபி, டீயா? 70 ரூபாய்! இது சாதாரணத் தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கார்ன் ரூ.400 வரை விற்கிறார்கள். இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.

சென்னை

சினிமா தியேட்டர்கள் ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அரங்கம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆணும், பெண்ணும் குழந்தையும் குட்டியுமாக கிளம்பி திருவிழாவிற்குப் போவது போல் தியேட்டர்களுக்கு போவார்கள். இப்போது அந்த ஆர்வமும், ஆசையும் இருந்தாலும்கூட அந்த மக்களால் சினிமா தியேட்டர்களுக்கு போகமுடியுமா என்று கேட்டால், முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது.

மயக்கம் தரும் விலை

அந்த அளவில் தியேட்டர்கள் சாதாரண, சாமன்ய மக்களின் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இல்லை. டிக்கெட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலைகளைக் கேட்டால் மயக்கம் போட்டுதான் விழ வேண்டும்.

10 ரூபாய், 20 ரூபாய்க்குக்கூட தகுதி இல்லாத வெறும் மக்காச் சோளப் பொரிக்கு (பாப்கார்ன்) 250 ரூபாய்! காபி, டீயா? 70 ரூபாய்! இது சாதாரணத் தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கார்ன் ரூ.400 வரை விற்கிறார்கள். நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களையும் அனுமதிக்க மாட்டார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் டிக்கெட் கட்டணத்தைவிட தின்பண்டங்கள் விலைகளே திகைக்க வைக்கின்றன.

இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.

என்ன நியாயம்?

இதுபற்றி விசாரித்தால், ''தியேட்டர் பராமரிப்புச் செலவு அதிகமாகிறது. டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயிப்பதால் அதை உயர்த்த முடியவில்லை. தின்பண்டங்களின் விலைகளை அதிகமாக வைத்திருக்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்தி தின்பண்டங்கள் வாங்கச் சொல்வது இல்லை'' என்கிறார்கள்.

நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களைப் பிடுங்கிவைத்துக் கொண்டு இவ்வாறு சொல்வது என்ன நியாயமோ? தெரியவில்லை. சினிமா தொழிலுக்கு மூலதனமே அதைப் பார்க்கவரும் ரசிகர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் ஆதங்கங்கள், கருத்துகள் வருமாறு:-

ஆரோக்கியமான உணவு

இதுகுறித்து கல்லூரி மாணவி நர்மதா கூறும் போது, 'திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் விலையும் உயர்வு, ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை. இதனை வாங்கி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதுடன், செலவையும் கட்டுப்படுத்துவதற்காக எதையும் திரையரங்குகளில் வாங்குவதில்லை. முன்பு எல்லாம் திரையரங்குகளில் உடலுக்கு ஆரோக்கியமான சுண்டல், வேர்க்கடலை, கடலை மிட்டாய், சுக்குகாப்பி மற்றும் கலர் சோடா போன்றவை விற்பனை செய்திருப்பதாக என்னுடைய பெற்றோர்கள் கூறிக் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் நாகரிக மோகத்தில் தற்போது திரையரங்குகளில் பீசா, பர்கர்கள், பாப்கார்ன், குளிர்பானங்கள், சமோசா போன்றவை அநியாயமான விலையில் விற்கப்படுகிறது. பெற்றோர்கள் சினிமா பார்க்கத் தரும் தொகை குறைவு என்பதால் இடைவேளையில் சீட்டை விட்டு வெளியே போவதைத் தவிர்த்து விடுகிறோம். ஆரோக்கியமான உணவு மற்றும் நவதானிய பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து நியாயமான கட்டணத்தில் வழங்கினால் தொடர்ந்து திரையரங்கு பக்கம் பொதுமக்கள் வருவார்கள். தவறும் பட்சத்தில் வரும் காலங்களில் திரையரங்கு பக்கம் வருவது குறித்து யோசிக்க வேண்டியிருக்கும்' என்றார்.

'பகல் கொள்ளையா இருக்கு'

ஆழ்வார்பேட்டையில் உள்ள திரையரங்கில் சினிமா பார்த்து விட்டு வந்த மொகைதீன் கூறும் போது, 'சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்' அதாவது, ஒரு பொருளின் விலையைவிட அதை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல அதிக பணம் செலவு செய்வதுதான் இதன் அர்த்தம். அதேபோல் தியேட்டர் கட்டணத்தைவிட, பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களில் விலை 2 மடங்கு அதிகமாக விற்கப்படுகின்றன. ரூ.20 மதிப்புள்ள பாப்கானை ரூ.250-க்கு வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அவல நிலை திரையரங்குகளில் இருக்கிறது. இது பகல் கொள்ளையாக இருக்கிறது. டீ, காபி போன்றவை ரூ.70-க்கு விற்பனை செய்கின்றனர். அதேபோல் என்னுடைய 4 வயது குழந்தைக்கும் முழு டிக்கெட் ரூ.177 எடுக்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறையினர் வேடிக்கை பார்க்காமல், பொதுமக்கள் நலன் கருதி கண்டுபிடித்து தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மனதிற்கு வேதனை

அண்ணாசாலையில் உள்ள திரையரங்கில் சினிமா பார்த்து விட்டு வந்த ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளான ஷோபா, விஜி, பீனா, வித்யா ஆகியோர் கூறும் போது, 'சினிமா இடைவேளையின்போது பாப்கார்ன் மற்றும் 2 குளிர்பானங்களை அதிக விலையான ரூ.450-க்கு வாங்கி நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டு இருந்தோம். அப்போது ஒரு குடும்பத்தினர் பாப்கார்ன் விலையை கேட்ட உடன் அதிர்ச்சி அடைந்ததுடன், அதனை வாங்கித்தர அடம்பிடித்த குழந்தையை சமாதானம் செய்ததை நேரில் பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக இருந்தது. இதனால் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டோம். பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் திரையரங்குக்கு வருவதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தின்பண்டங்களை அதிக விலைக்கு விற்பதை நிறுத்திவிட்டு, நியாயமான விலைக்கு விற்க வேண்டும். ரூ.10-க்கு டிக்கெட் வாங்கி திரைப்படம் காண வருபவர்கள் ரூ.400 கொடுத்து எப்படி பாப்கார்ன் சாப்பிட முடியும். திரையரங்குகளில் கட்டண உயர்வுகளை அரசு முறைப்படுத்தி, அனைத்து தரப்பினரும் திரையரங்கிற்கு வந்து பொழுதை கழிக்க செய்ய வேண்டும்' என்றார்.

பாரம்பரிய தின்பண்டங்கள் இல்லை

தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் கோகுல் கூறும்போது, 'திரையரங்குகளில் பாப்கான் விலை அதிகம்தான். இதுகுறித்து மனவேதனைப் பட்டு, துன்பப்பட்டு கூறினாலும், பாப்கானை அதிக விலைக்கு வாங்கி பொதுமக்களும் பழகி விட்டனர். பாப்கான் உள்ளிட்ட தற்காலத்தில் உள்ள தின்பண்டங்கள்தான் கிடைக்கிறது. பாரம்பரிய தின்பண்டங்களான தேன் மிட்டாய், கமர்கட், எள்ளுரண்டை, கடலை மிட்டாய், கொக்கொ மிட்டாய் போன்ற எதுவும் கிடைப்பதில்லை. அதேபோல் காபி, டீ போன்றவையும் ரூ.70-க்கு மேல்தான் விற்பனை செய்யப்படுகிறது. குளிர்பானங்கள், பாப்கான், சமோசா வாங்கும் விலைக்கு வீட்டில் ஆன்லைன் மூலம் சினிமா பார்ப்பதுடன், 2 கிலோ சிக்கன் வாங்கி சமைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக சாப்பிட முடியும். இதே பாணியைத்தான் தற்போது பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர். திரையரங்குகளுக்கு சினிமா பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது மிக, மிக குறைவாகத்தான் இருக்கிறது. இந்த நிலை தொடர்வதால் பல இடங்களில் சினிமா கூடங்கள் திருமண மண்டபங்களாக மாறி வருவதையும் காணமுடிகிறது' என்றார்.

திரையரங்கு செல்லும் ஆசை இல்லை

ஷெனாய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி மோகன பிரியா கூறும் போது, 'திரையரங்குகளில் தின்பண்டங்கள், குளிர்பானங்களுக்கு கொடுக்கும் கட்டணத்தில் 5 சினிமா பார்த்துவிட முடியும். இதனால் திரைப்படம் பார்க்க செல்வதற்கு முன்பாக 4 மணி நேரத்திற்கு பசிக்காத அளவிற்கு வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு சென்று விடுவேன். ஒரு சிலர் திரையரங்குக்கு அருகில் உள்ள உணவு விடுதிகளில் பரோட்டா சாப்பிட்டு விட்டு திரையரங்குகளுக்கு செல்கின்றனர். தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விலை திரையரங்குகளில் அதிகம் என்பதால் அங்கு படம் மட்டுமே பார்ப்போம். இடைவேளையில் எதுவும் வாங்க மாட்டோம். எங்களைப் போன்று பலரும் மாறி வருகின்றனர். விலைகளை குறைத்தால் தின்பண்டங்களை வாங்கி அனைவரும் சாப்பிடுவார்கள். வெளியில் இருந்து தின்பண்டங்கள் கொண்டு வரவும் அனுமதிப்பது இல்லை. இவ்வாறு செய்வதால் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையே போய் விடுகிறது' என்றார்.

நிர்ப்பந்தம் செய்வது இல்லை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கூறும் போது, 'திரையரங்குகளுக்குள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிப்பதால் அதற்கு ஏற்ற வருவாயை தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இடைவேளையில் விற்கப்படும் பாப்கானை பொறுத்த வரையில் சென்னையில் ரூ.400, ரூ.200, ரூ.150 என்ற விலையிலும், டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரையில் ரூ.10, ரூ.70 மற்றும் ரூ.146 என்ற நிலையிலும் இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம். சென்னையைவிட்டு பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ.30 அதிகபட்சமாக ரூ.40 கட்டணத்தில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விற்பனை செய்யும் போது பாப்கான் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் நாங்கள் நிர்ப்பந்திப்பது இல்லை. அவர்களாகத்தான் சென்று வாங்கிக் கொள்கின்றனர். திரையரங்குகளில் பாப்கார்ன் மட்டும் அப்படி விற்பதில்லை, ரெயில் டிக்கெட் கவுண்ட்டரில் ஒரு கட்டணம், சாதாரணமாக ஆன்-லைனில் வாங்கினால் ஒரு கட்டணம், தட்கல் மற்றும் பிரிமியம் தட்கல் என்ற வகையில் கட்டணங்கள் மாறுபடுகிறது. செலவினங்களுக்கு ஏற்ப வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது' என்றார்.

அரசு வசம் ஆன்லைன் டிக்கெட்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் கூறும் போது, 'திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள் அவர்கள் வாங்கும் விலையில் இருந்து 70 சதவீதம் மிக, மிக அதிகமாக அநியாய விலையில் விற்கின்றனர். வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டுவரக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு திரையரங்கு பக்கமே வருவதில்லை. அதிலும் குறிப்பாக பெரிய படங்களாக இருந்தால் திரையரங்குகளுக்கு வருகிறார்கள், சிறிய படங்களாக இருந்தால் எவரும் எட்டிக்கூட பார்ப்பதில்லை. டிக்கெட்டுகளும் ரூ.100-க்கு பதிலாக ரூ.400, ரூ.500 என்று விற்கப்படுகிறது. ஆன்லைன் கட்டணம் என்று ஒரு டிக்கெட்டுக்கு ரூ.40 கூடுதலாக வசூலிக்கின்றனர். 5 டிக்கெட் என்றால் ஆன்லைன் கட்டணம் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது. இதனை திரையரங்கை சேர்ந்தவர்களும், ஆன்லைன்காரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். வாகனம் நிறுத்துவதற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணம், பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள், டீ, காபி செலவுகளுக்கு தனியாக ரூ.500 வேண்டும். மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் இல்லாமல் ஒரு குடும்பத்தினரால் திரையரங்குக்கு வரமுடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் திருட்டு சிடி அதிகரித்து சினிமா தொழிலே நசுங்கி வருகிறது. தொழிலை மேம்படுத்த ஆன்லைன் டிக்கெட் விற்பனை தனியாரிடம் இல்லாமல் அரசு வசம் கொண்டு வந்து அவற்றை முறைப்படுத்த வேண்டும். தின்பண்டங்கள் விலை, வாகன நிறுத்தும் கட்டணம் உள்ளிட்டவற்றை திரையரங்குகளில் குறைக்க வேண்டும்' என்றார்.


Next Story