சோசியல் மீடியாவில் பிரபலமான நரிக்குறவ பெண் அஸ்வினி கைது


சோசியல் மீடியாவில் பிரபலமான நரிக்குறவ பெண் அஸ்வினி கைது
x

மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த சக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.

அப்போது அவர் கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோவில் அவரே புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த கோயிலுக்கு சென்ற அமைச்சர் பி.கே. சேகர் பாபு அந்த பெண்ணுடனும் மற்ற நரிக்குறவ சமூகத்தினருடனும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நரிக்குறவர்கள் வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்ற முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அஸ்வினியின் வீட்டுக்கும் சென்று அவரை திக்குமுக்காட வைத்தார்.

இந்தநிலையில் சமீப காலமாக நரிக்குறவ பெண் அஸ்வினி மீது புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது. அங்கு நாடோடி பழங்குடியின சமூகத்தினர் ஊசிமணி, பாசிமணி விற்று வருகிறார்கள். அவ்வாறு விற்பனை செய்த போது நந்தினி என்ற பெண்ணுடன் அஸ்வினி தகராறு செய்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியபோது தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கையில் கிழித்ததாக புகார் அளித்துள்ளார்.

நந்தினியின் புகாரின் பேரில் அஸ்வினியை மாமல்லபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அஸ்வினியிடம் கேட்ட போது தனது வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து சாப்பிட்டுவிட்டு சென்றதால் நான் பிரபலமாகிவிட்டேன் என்ற காழ்ப்புணர்ச்சியால் என் மீது இப்படியெல்லாம் பழிச் சுமத்துகிறார்கள் என அஸ்வினி தெரிவித்துள்ளார்.


Next Story