வளசரவாக்கத்தில் பிரபல டி.வி. தொடர் இயக்குனரின் மனைவி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்


வளசரவாக்கத்தில் பிரபல டி.வி. தொடர் இயக்குனரின் மனைவி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
x

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரபல டி.வி. தொடர் இயக்குனரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை வளசரவாக்கம், அன்பு நகர், 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நாகரத்தினம் (வயது 47). டி.வி. தொடர் இயக்குனரான இவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டவர் இல்லம்' என்ற தொடரை இயக்கி வருகிறார். மேலும் 'வாணி ராணி', 'செவ்வந்தி' உள்ளிட்ட மேலும் சில டி.வி. தொடர்களையும் இயக்கி உள்ளார்.

இவருடைய மனைவி பத்மாவதி (37). இவர்களுடைய சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகும். ஒரே ஊரைச் சேர்ந்தவர்களான இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு நவினேஷ் (15), சாய் ஆதர்ஷ் (8) என 2 மகன்கள். தற்போது பள்ளிகளுக்கு ேகாடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாகரத்தினம் தனது குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் 2 மகன்களையும் அவர்களது தாத்தா-பாட்டி வீட்டில் விட்டு, விட்டு மனைவியுடன் நாகரத்தினம் சென்னை வந்துவிட்டார்.

வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து ஏதாவது தொழிலில் முதலீடு செய்யுமாறு நாகரத்தினத்திடம் அவருடைய மனைவி பத்மாவதி கூறி வந்தார். அதற்கு நாகரத்தினம், நகைகளை விற்று தொழிலில் முதலீடு செய்வதைவிட சொந்த ஊரில் நிலம் வாங்கலாம் என்றார். இதனால் கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் டி.வி. தொடர் படப்பிடிப்புக்கு சென்ற நாகரத்தினம், நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் மீண்டும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையில் சொந்த ஊரில் இருந்து அவர்களுடைய 2 மகன்களும் நேற்று காலை சென்னை திரும்பி வந்தனர். அவர்களை அழைத்து வருவதற்காக நாகரத்தினம் மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு சென்றார். பின்னர் 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் அறையில் தனது மனைவி பத்மாவதி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பத்மாவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த வளசரவாக்கம் போலீசார், தற்கொலை செய்த பத்மாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story