பழங்கால பானை ஓட்டு கீறல்கள் கண்டுபிடிப்பு

காளையார்கோவில் பாண்டியன்கோட்டையில் பழங்கால பானை ஓட்டு கீறல் குறியீடுகளை சிவகங்கை தொல்நடை குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
சிவகங்கை
காளையார்கோவில் பாண்டியன்கோட்டையில் பழங்கால பானை ஓட்டு கீறல் குறியீடுகளை சிவகங்கை தொல்நடை குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
கள ஆய்வு
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் காளிராசா கூறியதாவது:- காளையார் கோவிலில் புறநானூற்று பாடலில் இடம்பெற்ற சங்க இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன்கோட்டை என்னும் பகுதி உள்ளது. இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன் கோட்டையில் ஆழமான அகழி மற்றும் நடுவில் நீராவி குளம் ஆகிய சங்க இலக்கிய கோட்டையின் இலக்கண அமைப்போடு அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டை மேடு 37 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அமைந்துள்ளது.
சிவகங்கை தொல்நடைக்குழுவினர் தொடர்ந்து இப்பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அதில் சங்க கால செங்கல் எச்சங்கள், கூரை ஓட்டு எச்சங்கள், மண்ணால் கல்லால் ஆன உருண்டைகள், வட்டச் சில்லுகள், மோசிதபன் என்னும் தமிழி எழுத்தில் பெயர் பொறித்த பானை ஓடு கிடைத்துள்ளன.
தற்பொழுது பானை ஓட்டில் கீறல்கள் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளன. இதில் ஒரு குறியீடு ஆங்கில எழுத்தில் இசட் போல் உள்ளது. மற்றொன்று முக்கோண வடிவில் கீழே கால்கள் வரையப்பட்டதை போல் உள்ளது. மற்றொரு குறியீடு மீன் அல்லது வில் அம்பின் முனை போன்று காணப்படுகிறது.
முந்தைய கால குறியீடுகள்
பொதுவாக குறியீடுகள் சிந்து சமவெளி அகழாய்வு முதல் அனைத்து இடங்களிலுமே கிடைக்கின்றன. இவை மொழிக்கு முன்னதாக குறியீட்டின் வழி கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து. தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் களஆய்வு குழிகளில் முதல் அடுக்குகளில் தமிழி எழுத்துக்களும் அதற்கு பின்உள்ள அடுக்குகளில் குறியீடுகளும் கிடைக்கப் பெறுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்,
இதன்படி தமிழி எழுத்திற்கும் முந்தைய காலத்தை சேர்ந்ததாக இக்குறியீடுகள் கருதப்படுகின்றன. இங்கு கிடைத்துள்ள குறியீடுகள் மற்ற அகழாய்வு தலங்களிலும் கிடைத்திருப்பது ஒத்த காலத்தை உறுதிப்படுத்துகிறது. அழுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அழகான வேலைப்பாடுடைய பானைகள் மற்றும் பெரிய அளவிலான பானைகளை வடிவமைத்துள்ளனர். இவ்வாறான ஓடுகள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க கிடைத்துள்ளன என்பது இத்தொழில் நுட்பம் பரவலாக இருந்ததை அறிய உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






