ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி - மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா


ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி - மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா
x

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி செய்ய உள்ளதாக மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா தகவல் தெரிவித்துள்ளார்.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை மந்திரி பகவந்த் கூபா பார்வையிட்டார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த டபிள்யூ இ ஜி நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பில் இந்தக் காற்றாலை டர்பைனை அமைத்துள்ளது . இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலை டர்பைனைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய மந்திரி, அந்த நிறுவன அதிகாரிகளிடம் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை செயல்பாடு , உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களைக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்,

எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட டர்பைனைத் தயாரிக்க உள்ளோம். இந்திய கடலோரப் பகுதியில் 70 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. குறிப்பாக ராமேசுவரம் தனுஷ்கோடியில் சுமார் 30 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. இங்கு இரண்டு காற்றாலை டர்பைன் நிறுவ உள்ளோம்.

இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றார். 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பிரதமர் மோடி இலக்கு நிர்ணையித்துள்ளார். இதற்குப் போதுமான அளவு வாய்ப்பும் வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும் , பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் டபிள்யூ இ ஜி நிறுவன நிர்வாக இயக்குனர் ஜீன்கார் நோபஸ்கீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்


Next Story