தமிழகம், புதுவையில் நாளை முதல் 4 நாட்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம்


தமிழகம், புதுவையில் நாளை முதல் 4 நாட்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம்
x

கோப்புப்படம் 

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதல் 8-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதல் 8-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆகஸ்ட் 5-ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தரும் அவர், தமிழ்நாட்டில் உள்ள யானைகள் பராமரிப்போருடன் கலந்துரையாடுகிறார்.

இதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஆகஸ்ட் 6-ம் தேதி ஜனாதிபதி உரையாற்றுகிறார். அன்றைய தினம், சென்னை கவர்னர் மாளிகையில், தமிழ்நாட்டின் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கிறார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதுடன், கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பாரதியார் மண்டபம் என பெயர் சூட்டும் விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.

பின்னர், புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்) லீனியர் ஆக்ஸிலரேட்டர் உபகரணத்தை ஆகஸ்ட் 7ம் தேதியன்று தொடங்கிவைக்கிறார்.

தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்து வைக்கும் அவர், புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

ஆகஸ்ட் 8, 2023 அன்று, ஆரோவில்லில், நகர கண்காட்சியான மணிமந்திரைப் பார்வையிடும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கு மாநாடு ஒன்றையும் தொடங்கி வைக்கிறார்.


Next Story