மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - ப.சிதம்பரம்


மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - ப.சிதம்பரம்
x

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"மெய்தி, குக்கி மற்றும் நாகா இன மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தின் கீழ் ஒன்றாக வாழ வேண்டும் ஒவ்வொரு இனத்தவருக்கும் மற்றொரு பிரிவினர் மீது குறைகள் இருக்கலாம்; யார் சரி, யார் தவறு என்பதை பொருட்படுத்தாமல், 3 குழுக்களும் பேசி தீர்வு காண வேண்டும். பழி போடுவதை நிறுத்திவிட்டு அனைத்து பிரிவினரும் வன்முறையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையால், அனைத்து தரப்பினரும் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளனர் மற்றும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையேயான இந்த வன்முறை நிறுத்தப்பட்டு, இருவரும் பேச முன்வர, அங்கே நடுநிலையான அமைப்பு தேவைப்படுகிறது. அதனால்தான் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story