திருவாரூரில், முருங்கைக்காய்- கறிவேப்பிலை விலை கிடு, கிடு உயர்வு


திருவாரூரில், முருங்கைக்காய்- கறிவேப்பிலை விலை கிடு, கிடு உயர்வு
x
தினத்தந்தி 20 Jan 2023 7:00 PM GMT (Updated: 20 Jan 2023 7:01 PM GMT)

திருவாரூருக்கு வரத்து குறைவால் முருங்கைக்காய் மற்றும் கறிவேப்பிலை விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது.

திருவாரூர்

திருவாரூருக்கு வரத்து குறைவால் முருங்கைக்காய் மற்றும் கறிவேப்பிலை விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது.

காய்கறி மார்க்கெட்

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக திருச்சி, கும்பகோணம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் கொண்டு வரப்படும். சமையலுக்கு பயன்படும் முக்கியமான காய்கறிகளில் முருங்கைக்காயும் ஒன்று.முருங்கைக்காயை பயன்படுத்தி சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு ஆகியவற்றை சமைக்கலாம் என்பதால் இதன் தேவை எப்போதும் அதிகமாக உள்ளது.

முருங்கைக்காய்

திருவாரூருக்கு திருச்சி, கும்பகோணம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு 1 கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்பனையானது. கடந்த வாரம் சற்று விலை அதிகரித்து ரூ.100-க்கு விற்பனையானது. இவ்வாறு தொடாந்து விலை அதிகரித்து வந்த நிலையில் நேற்று 1 கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.

மற்ற காய்கறிகள்

இதேபோல் தக்காளி, கறிவேப்பிலை விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 1 கிலோ ரூ.30-க்கு விற்பனையான தக்காளி நேற்று ரூ.45-க்கு விற்பனையானது. பூச்சி தாக்குதல், பனிப்பொழிவு, இலை கருகல் உள்ளிட்ட பாதிப்புகளால் கறிவேப்பிலை வரத்து குறைந்துள்ளது. இதனால் முருங்கைக்காய் விலையை போல் கறிவேப்பிலை விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ரூ.50-க்கு விற்பனையான கறிவேப்பிலை நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. முருங்கைக்காய், தக்காளி, கறிவேப்பிலை விலை அதிகரித்து வந்தாலும் மற்ற காய்கறிகள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் தற்போது உள்ள பனிப்பொழிவு காரணமாக முருங்கைக்காய், கறிவேப்பிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

வரத்து குறைந்தது

இதனால் எப்போதும் உள்ள வரத்தை விட நேற்று வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் விலை அதிகரித்துள்ளது. கறிவேப்பிலையை பொருத்தவரை சீசன் முடியும் தருவாயில் உள்ளது. வருகிற சிவராத்திரி வரை தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருக்கும்' என்றனர்.


Next Story