வயிற்று வலியை சரி செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி


வயிற்று வலியை சரி செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி
x
தினத்தந்தி 10 Jun 2022 10:30 AM GMT (Updated: 10 Jun 2022 10:34 AM GMT)

வயிற்று வலிப் பிரச்சினையை சரிசெய்யக்கோரி பூசாரியை சந்திக்கச் சென்ற சிறுமி கர்ப்பமாக்கிய பூசாரியின் செயல் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் 15 வயது மகள் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். கீரனூர் அருகே மணிப்பிள்ளை பகுதியைச் சேர்ந்த பூசாரி பழனியை சந்தித்து, தங்களின் மகளுக்கு ஏற்பட்ட வயிற்று வலி பிரச்சினைக் குறித்து கூறிஉள்ளனர்.

அதற்கு பூசாரி பழனி `சிறுமிக்கு காத்து, கருப்பு அண்டியிருக்கிறது. அதை விரட்டினால், இந்தப் பிரச்னை தீரும்! இதற்கு சிறப்புப் பூஜை செய்ய வேண்டும். அதுவும் சிறுமியைத் தனியாக வைத்துத்தான் அந்த பூஜையை செய்ய வேண்டும்' என்று கூறியிருக்கிறார். மகள் நலம்பெற வேண்டும் என்பதால் பெற்றோரும் பூஜைக்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

அதையடுத்து, பெற்றோர் கண் முன் முன்னே சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் பூசாரி. உள்ளே கூட்டிச் சென்றவர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், `நடந்ததை வெளியே சொன்னால், சாமி குத்தம் ஆகி நீ, உன் குடும்பத்துல இருக்குறவங்க எல்லாருமே செத்து போயிடுவீங்க!' என்று சிறுமியை மிரட்டி மேலும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதனால், உயிருக்குப் பயந்து வெளியேவந்த சிறுமி தன் தாயிடம்கூட நடந்ததைக் கூறவில்லை. தொடர்ந்து, சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த சிறுமியின் தாய், அவரிடம்விசாரித்ததில், பூசாரி தன்னிடம் நடந்துகொண்ட சம்பவத்தை விவரித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது குறித்து வழக்கு பதிவுசெய்த கீரனூர் போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், பூசாரி பழனி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், சிறுமி மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, கோயில் பூசாரி பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.


Next Story