இந்துக்கள் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வலியுறுத்தல்


இந்துக்கள் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Sep 2022 6:45 PM GMT (Updated: 18 Sep 2022 6:45 PM GMT)

இந்துக்கள் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நேற்று பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசும், போலீசாரும் எடுத்து வருகின்றனர். தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரை தாக்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யையும், மாவட்ட கலெக்டரையும் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம். மேலும் திருச்சி கோட்ட பா.ஜ.க.வினர் சார்பில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும்.

ஆ.ராசா மற்ற மதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கு விரோதமான விஷயங்கள் குறித்தும், சமூக நீதிக்கு விரோதமானவை குறித்தும் மற்றும் பெரியார் என்ன, என்ன பேசியிருக்கிறார் என்பது குறித்தும் பேசுவாரா?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதி ராசா எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். இந்துக்கள் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக பா.ஜ.க. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது, என்றார். பேட்டியின்போது கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் உடனிருந்தார்.


Next Story